Friday, January 25, 2013

Plus Two Students

பிளஸ் டூ மாணவர்கள்   உதவித் தொகையுட ன் எம்எஸ்சி படிக்கலாம்!
பொன். தனசேகரன்

புவனேஸ்வரத்தில் உள்ள நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ் எஜுக்கேஷன் அண்ட் ரிசர்ச், மும்பையில் உள்ள சென்டர் ஃபார் எக்ஸலன்ஸ் இன் பேசிக் சயின்சஸ் ஆகிய கல்வி நிறுவனங்களில் ஐந்து ஆண்டு ஒருங்கிணைந்த எம்எஸ்சி அறிவியல் பட்டப் படிப்புகளில் பிளஸ் டூ மாணவர்கள் சேரலாம். உதவித் தொகையுடன் கூடிய இந்தப் படிப்பில் சேருவதற்கு நெஸ்ட் என்ற நுழைவுத் தேர்வை எழுத வேண்டும்.

பிளஸ் டூ முடித்த திறமையான மாணவர்களை இளநிலைப் பட்ட நிலையிலே அறிவியல் பாடப்பிரிவுகளின் பக்கம் ஈர்க்கும் வகையில் ஐந்து ஆண்டு ஒருங்கிணைந்த அறிவியல் படிப்புகளை முக்கியத்துவம் வாய்ந்த பல கல்வி நிலையங்கள் வழங்கி வருகின்றன. அதுபோன்ற அறிவியல் படிப்புகளில் சேரும் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையும் வழங்கப்படுகின்றன. புவனேஸ்வரத்தில் உள்ள நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ் எஜுக்கேஷன் அண்ட் ரிசர்ச், மும்பையில் உள்ள சென்டர் ஃபார் எக்ஸலன்ஸ் இன் பேசிக் சயின்சஸ் ஆகிய கல்வி நிறுவனங்கள் இந்திய அணுசக்தித் துறையின்கீழ் செயல்படும் முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனங்கள். இந்தக் கல்வி நிலையங்களில் உயிரியல், வேதியியல், கணிதம், இயற்பியல் ஆகிய பாடப்பிரிவுகளில் ஐந்து ஆண்டுகள் ஒருங்கிணைந்த எம்எஸ்சி படிக்கலாம். தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, கிரீமிலேயர் அல்லாத ஓ.பி.சி. மாணவர்களுக்கும் ஊனமுற்ற மாணவர்களுக்கும் அரசு விதிகளின்படி ஒதுக்கீடும் உண்டு. நெஸ்ட் நுழைவுத் தேர்வின் அடிப்படையில் விஸ்வ பாரதியில் உள்ள இன்டகிரேட்டட் சயின்ஸ் எஜுக்கேஷன் ரிசர்ச் சென்டரில் ஒருங்கிணைந்த எம்எஸ்சி படிப்புகளிலும் இத்தேர்வின் மூலம் மாணவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். இங்கு படிப்பதற்கு தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கும் இன்ஸ்பயர் உதவித் தொகை கிடைக்கும். அணுசக்தித் துறையில் பணிபுரிய திறமையான அறிவியல் மாணவர்களை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் நடத்தப்படும் இந்தப் படிப்புகளில் சேரும் மாணவர்களுக்கு அறிவியல் தொடர்பான ஆராய்ச்சிகளில் ஈடுபடுவதற்கேற்ற வகையில் ஊக்கம் அளிக்கப்படும்.

இந்தத் தேர்வை எழுத என்ன தகுதி இருக்க வேண்டும்?

பிளஸ் டூ வகுப்பில் உயிரியல், வேதியியல், கணிதம், இயற்பியல் ஆகிய பாடப்பிரிவுகளை எடுத்துப் படித்து தற்போது பிளஸ் டூ தேர்வு எழுத உள்ள மாணவர்கள் இத்தேர்வை எழுத விண்ணப்பிக்கலாம். 2011, 2012 ஆகிய ஆண்டுகளில் பிளஸ் டூ தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களும் இந்த நுழைவுத் தேர்வை எழுத விண்ணப்பிக்கலாம். பிளஸ் டூ தேர்வில் குறைந்தது 60 சதவீத மதிப்பண்கள் பெற்றிருக்கவேண்டும். 1993-ஆம் ஆண்டு ஜூலை 22-ஆம் தேதியோ அல்லது அதற்குப் பிறகோ பிறந்த பொது மற்றும் ஓபிசி பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்கள் இத்தேர்வை எழுத அனுமதிக்கப்படுவார்கள். தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகளுக்கு வயது வரம்பில் 5 ஆண்டுகள் சலுகை உண்டு.

நெஸ்ட் தேர்வு எப்படி இருக்கும்?

தமிழ்நாட்டில் சென்னை, மதுரை உள்பட நாட்டில் மொத்தம் 42 நகரங்களில் இந்த நுழைவுத் தேர்வு எழுதலாம். மே 25-ஆம் தேதி காலை 10 மணியிலிருந்து பிற்பகல் 1 மணி வரை இத்தேர்வு நடைபெறும். இந்த நுழைவுத் தேர்வு வினாத்தாள் ஆங்கிலத்தில் அப்ஜெக்ட்டிவ் முறையில் இருக்கும். இந்த வினாத்தாளில் ஐந்து பிரிவுகள் இருக்கும். இதில் பொதுக் கேள்விகள் அனைவருக்கும் பொதுவானவை. உயிரியல், வேதியியல், கணிதம், இயற்பியல் ஆகிய நான்கு பிரிவுகளில் மாணவர்கள் ஏதேனும் மூன்று பாடப்பிரிவுகளைத் தேர்வு செய்து அந்த வினாக்களுக்குப் பதில் அளிக்கலாம். அனைத்துப் பிரிவுகளிலும் உள்ள கேள்விகளுக்கு சமமான மதிப்பெண்கள் வழங்கப்படும். கேட்கப்பட்ட வினாக்களுக்கு கொடுக்கப்பட்ட நான்கு பதில்களில் எது சரியான பதில் என்பதைத் தேர்வு செய்ய வேண்டும். தவறான பதில்களுக்கு நெகட்டிவ் மதிப்பெண்கள் உண்டு. இந்த நுழைவுத் தேர்வுக்கான பாடத்திட்டம் பெரும்பாலும் சி.பி.எஸ்.இ., 11-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்புப் பாடத்திட்டத்தையொட்டியதாகவே இருக்கும். இந்த நுழைவுத் தேர்வுக்கான பாடத்திட்டம் நெஸ்ட் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. பொதுப் பிரிவு கேள்விப் பகுதிக்கு என தனிப் பாடத்திட்டம் எதுவும் கிடையாது. வானியல், உயிரியல், வேதியியல், கணிதம், இயற்பியல், கம்ப்யூட்டர் சயின்ஸ், சுற்றுச்சூழல் அறிவியல் ஆகிய பாடப்பிரிவுகளில் முக்கிய வரலாற்று நிகழ்வுகளை மாணவர்கள் தெரிந்து இருக்கிறார்களா என்பது குறித்து பொதுப்பிரிவில்  கேள்விகள் கேட்கப்படும். பத்தாம் வகுப்புக் கணிதத்தை அடிப்படையாகக் கொண்ட கேள்விகளும் இதில் கேட்கப்படலாம்.

தேர்வு நடைபெறுவதற்கு 30 நிமிடங்கள் முன்னதாக மாணவர்கள் தேர்வு மையத்திற்கு வந்துவிட வேண்டும். தேர்வு தொடங்கிய பிறகு அரை மணி நேரம் கழித்து வரும் மாணவர்கள் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். தேர்வு எழுத வந்த மாணவர்கள் தேர்வு தொடங்கிய ஒரு மணி நேரத்திற்குப் பிறகுதான், தேர்வு அறையை விட்டு வெளியேற முடியும்.

தேர்வு அறைக்குள் கால்குலேட்டர்கள் அனுமதிக்கப்பட மாட்டாது. நுழைவுத் தேர்வு எழுத வரும்போது அனுமதி அட்டையையும் பள்ளி அடையாள அட்டையையும் மாணவர்கள் தேர்வு எழுதவரும்போது கொண்டுவர வேண்டும். தகுதி அடிப்படையில் மட்டுமே மாணவர்கள் இந்தப் படிப்புகளுக்குத் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த நுழைவுத் தேர்வு முடிவுகள் ஜூன் 17-ஆம் தேதி வெளியிடப்படும்.

இத்தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி?

நுழைவுத் தேர்வு எழுத பொதுப் பிரிவு மற்றும் ஓ.பி.சி. மாணவர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.700. தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் அனைத்து மாணவிகளுக்கும் விண்ணப்பக் கட்டணம் ரூ.350. விண்ணப்பக் கட்டணத்தை டிமாண்ட் டிராப்ட் மூலமோ அல்லது எலெக்ட்ரானிக் பரிமாற்ற முறையின் மூலமோ அனுப்பலாம். The Chief Co-ordinator, NEST -2013  என்ற பெயருக்கு புவனேஸ்வரத்தில் மாற்றத்தக்க வகையில் விண்ணப்பக் கட்டணத் தொகைக்கான டிமாண்ட் டிராப்ட் எடுத்து அனுப்பலாம். புவனேஸ்வரத்தில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் நிசார் -நெஸ்ட் கணக்கிலும் இந்த விண்ணப்பக் கட்டணத்தை இங்கிருந்தபடியே செலுத்தலாம். விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். அவ்வாறு விண்ணப்பிக்கும்போது புகைப்படத்தையும் கையெழுத்தையும் முன்னதாகவே ஸ்கேன் செய்து வைத்திருக்க வேண்டியது அவசியம். ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கடைசி தேதி மார்ச் 8. நெஸ்ட் தேர்வு தலைமை ஒருங்கிணைப்பாளருக்கு விண்ணப்பக் கட்டணத்துடன் கடிதம் எழுதியும் விண்ணப்பப் படிவத்தை பெற்றுக்கொள்ளலாம். தபால் மூலம் விண்ணப்பதைப் பெறுவதற்கான கடைசித் தேதி பிப்ரவரி 20-ஆம் தேதியாகும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மார்ச் 8-ஆம் தேதிக்குள் கிடைக்கும்படி வந்து சேர வேண்டும்.

இங்கு படிக்கச் சேரும் மாணவர்களுக்கு உதவித் தொகை கிடைக்குமா?

புவனேஸ்வரத்தில் உள்ள நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ் எஜுக்கேஷன் அண்ட் ரிசர்ச், மும்பையில் உள்ள சென்டர் ஃபார் எக்ஸலன்ஸ் இன் பேசிக் சயின்சஸ் ஆகிய கல்வி நிறுவனங்களில் ஐந்து ஆண்டு ஒருங்கிணைந்த எம்எஸ்சி படிப்புகளில் சேரும் அனைத்து மாணவர்களுக்கும் மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறை வழங்கும் இன்ஸ்பையர் ஃபெல்லோஷிப் கிடைக்கும். அதாவது, மாதம் ரூ.5 ஆயிரம் வீதம் உதவித் தொகை வழங்கப்படும். அத்துடன், கோடை கால புராஜக்ட்டுகளை மேற்கொள்வதற்காக ரூ.20 ஆயிரம் வழங்கப்படும். இங்கு படிக்கும் திறமையான மாணவர்களுக்கு BARC டிரெயினிங் ஸ்கூலில் சேருவதற்கு நேரடியாக நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளவும் அனுமதிக்கபப்டுவார்கள். அனைத்து மாணவர்களுக்கும் தங்கும் இட வசதி செய்து தரப்படும். அறிவியல் கல்வியைப் படிப்பதற்கும் அது தொடர்பான ஆராய்ச்சியை மேற்கொள்வதற்கும் ஏற்ற வகையில் இங்குள்ள கல்விச் சூழல் இருக்கும்.

அறிவியல் துறையில் ஆர்வம் மிக்க மாணவர்களா நீங்கள்? பிளஸ் டூ படித்து முடித்ததுமே நேரடியாக எம்எஸ்சி ஒருங்கிணைந்த படிப்பில் சேருவதற்கான நல்ல வாய்ப்பு. அத்துடன் உதவித் தொகையும் உங்களுக்குக் கிடைக்கும். எனவே, திறமையான மாணவர்கள் இந்த வாய்ப்பை நழுவ விடாமல் இந்த நுழைவுத் தேர்வு எழுத இப்போதே விண்ணப்பிக்கலாம்.

விவரங்களுக்கு:www.nestexam.in

விண்ணப்பிக்க  வேண்டிய நேரம் இது : பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய கடைசி தேதி 8.3.2012

No comments:

Post a Comment